நாளை அதிகாலை சுபவேளையில் 2021-ம் ஆண்டுக்கான அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்!

குருபகவான் மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு வரும் 6.4.21 அன்று அதிசாரமாகப் பெயர்ச்சி ஆகிறார்.

பொதுவாக கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகும். உதாரணமாக சூரியன் மாதம் ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்வார். அதேபோல் சந்திரன் இரண்டேகால் நாள்களுக்கு ஒருமுறையும் செவ்வாய் ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறையும் புதன், சுக்கிரன் ஆகியவை மாதமொருமுறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்வார்கள். குரு, சனி, ராகு-கேது ஆகிய கிரகங்களுக்கு ஆண்டுகிரகங்கள் என்று பெயர். குருபகவான் ஆண்டுக்கொரு முறையும் சனிபகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும் ராகு கேது ஆகியோர் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவது வழக்கம்.

சில நேரங்களில் கிரகங்கள் பிற கிரகங்களின் ஈர்ப்புவிசை காரணமாக வேகமாக நகர்வதுண்டு. அப்படி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குத் தன் கால அளவு முடியுமுன்னரே பெயர்ந்து சஞ்சாரிப்பது அதிசாரம் எனப்படும். உதாரணமாக குருபகவான் ஆண்டு கிரகமாதலால் ஆண்டுக்கொருமுறையே பெயர்ச்சி ஆவார். கடந்த நவம்பர் மாதம் தனுசு ராசியிலிருந்து குருபகவான் மகர ராசிக்குப் பெயர்ந்தார். தற்போது அதிசாரமாக ஓராண்டுக்கு முன்னரே, வரும் ஆறாம் தேதி கும்பராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். பொதுவாக இதுபோன்று வேகமான நகர்தலை அதிசாரம் என்றே குறிப்பிடுவார்கள்.

இதுவரை மகரத்தில் ஜன்ம குருவாக சஞ்சரித்த குருபகவான் 6 ம் தேதி முதல் கும்பராசிக்குப் பெயர்ச்சி ஆகி அங்கே சுமார் ஆறுமாத காலம் அதாவது (15.9.2021) வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் கும்பராசியில் அமர்ந்து 5,7,9 ம் பார்வையாக மிதுனம், சிம்மன், துலாம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார்.

இதனால் 12 ராசிக்காரர்களும் இதுவரை நடைபெற்றுவந்த பலன்களில் மாறுபாடுகள் ஏற்படும். இதுவரை சிரம திசையில் இருந்தவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். சாதகமாக இருந்த ராசிக்காரர்களுக்கு சிறு கவனம் தேவைப்படலாம்.

எனவே அதிசார குருப்பெயர்ச்சியின் மூலம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை அறிந்துகொள்வது அவசியம்.

சக்திவிகடனின் முகநூல் மற்றும் யூட்யூப் பக்கங்களில் தினமும் அதிகாலை சுபவேளை என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளுக்குமான பஞ்சாங்கக் குறிப்புகள், ராசிபலன், விசேஷ தகவல்கள் மற்றும் இறை தரிசனம் ஆகியவை இடம் பெறுகின்றன. நாளை மற்றும் நாளை மறுநாள் (4.4.2021, 5.4.2021) ஆகிய இரு தினங்களிலும் அதிகாலை சுபவேளை நிகழ்ச்சி, அதிசார குருப் பெயர்ச்சி பலன்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக மலர்கிறது.

12 ராசிகளுக்குமான பலன்களையும் அதிசார குருப் பெயர்ச்சி பற்றிய சிறப்பு தகவல்களையும் நமக்கு வழங்க இருக்கிறார் விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்.

எனவே தவறாமல் நாளைய அதிகாலை சுபவேளை நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கான பிரத்யேக பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.