ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைப்பா…? – கல்வி அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை, அரியமங்கலம் குப்பை குடோன், சத்திரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…….திருச்சி சத்திரம் பேருந்து நிலைய டெர்மினல் ஒன் பணிகள் ஜுன் மாதம் முடிவடைந்து விடும்.  டெர்மினல் டூ பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வந்துவிடும்.  அவ்வாறு பயன்பாட்டிற்கு வரும் போது  பேருந்துகள் இந்த டெர்மினல்களுக்குள் வந்து 3 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்ட பின்னர் செல்லும் வசதி அமையும்.  

53 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடைகள் அமைத்தவர்களுக்கு தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். போக்குவரத்து இடையூறின்றி மக்களுக்கு உபயோகமான பேருந்து நிலையமாக இந்த சத்திரம் பேருந்து நிலையம் இருக்கும். அரியமங்கலம் குப்பை குடோனில் நாள் ஒன்றுக்கு 1500 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்குள் குப்பைககள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடும்.  வாட்ஸ் அப் மூலம் 100 சதவீதம் மாணவர்களை தொடர்பு கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் உள்ளது.

 நிறைய மாணவர்களிடம் இன்னும் ஸ்மார்ட் போன் கூட இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் மாணவர்கள் படிப்பறிவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக அலகு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல் வருகிறது. இது குறித்த முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.