வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்:

வெப்பச்சலனம் காரணமாக  தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வருகிற 2-ந் தேதி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையை உள்ளடக்கிய வட தமிழகம் உள்பட 13 மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
குமரிக்கடல்,  அந்தமான், இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இரு நாட்களுக்கு கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.