செப்டம்பரில் கொரோனா 3 ஆம் அலை, பள்ளிகள் திறப்பு – AIIMS இயக்குநர் விளக்கம்

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதையடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா 3 ஆம் அலைக்கான தாக்கம் செப்டம்பர் மாதம் முதல் துவங்குவதால் இது குறித்த கவனம் அவசியம் என AIIMS இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 

பள்ளிகள் திறப்பு

இந்தியாவில் தற்பொழுது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் தற்போது வரை கொரோனா புதிய பாதிப்புகளானது 30 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக சற்று ஏற்றமும், இறக்கமும் கண்டு வருகிறது. இது கொரோனா 3 ஆம் அலைக்கான ஆரம்பம் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா முழு ஊரடங்கு தளர்வில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3 ஆம் அலைக்கான தாக்கம் ஏற்படும் என்பதால் பள்ளிகள் திறப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற நுரையீரல் நிபுணரும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) இயக்குநருமான டாக்டர் ரன்தீப் குலேரியா, இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், ‘இந்தியாவில் செரோ கணக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஆன்டிபாடிகள் அதிகளவு உற்பத்தியாகியுள்ளன.

ஆனால் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனவால் எளிதில் பாதிக்கப்படுகிகின்றனர். இந்த ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறைவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இந்த ஆன்டிபாடி எண்ணிக்கையானது வெகுவாக குறையும். இருப்பினும் கொரோனாவின் 3 ஆம் அலை, இதற்கு முந்தைய பதிப்புகளை போல மோசமாக இருக்காது. இப்போது தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அடுத்த அலை உருவானாலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தாது.

இந்தியாவை பொருத்தளவு மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நோய் தொற்று அதிவேகமாக பரவுகிறது. இதனிடையே தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் ஒரு இடத்தில அதிகமாக இருக்கும் பட்சத்தில், இதுவரை கொரோனவால் பாதிக்கப்படாதவர்கள் கூட 3 ஆவது அலையின் போது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூன்றாவது அலை எப்போது உருவாகும் என்று உறுதியாக கணிக்க முடியாது. ஒருவேளை 3 ஆம் அலை உருவாவதற்கு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம். தற்போது வரை கொரோனா 2 ஆம் அலை தாக்கம் முழுமையாக குறையவில்லை.

அதனால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 3 ஆம் அலை உருவாகக்கூடும். இதுவரை குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படவில்லை. அதனால் இனி மேலும் நோய் தொற்று அதிகமானால் அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான். இதற்கிடையில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த ஒன்றரை வருடங்களாக குழந்தைகளது கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு 5%க்கும் குறைவான பாதிப்பு உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யலாம். வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாகவே குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடப்படலாம். இது நம்பிகையளிக்க கூடிய விஷயமாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.