கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்தது.
ஆனால், பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவா்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சிஐசிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான அனைத்து மனுக்கள் மீது இன்று விசாரணை மேற்கொண்டது.
இதில், சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறை நியாயமானதாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருப்பதாக கூறிய உச்சநீதிமன்றம், சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தற்போது பின்பற்றப்படும், மதிப்பெண் கணக்கீட்டு முறையில் திருப்தி அடையாத மாணவர்களுக்கான விருப்பத் தேர்வுகள் 2021 ஆகஸ்ட் 15 முதல் 2021 செப்டம்பர் 15 வரை எந்த நேரத்திலும் நடத்தப்படும் என்ற சிபிஎஸ்இ திட்டத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.