தமிழக
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துவது அரசின்
கொள்கை முடிவாகும் என்று சிறப்பு செயலாளர் கூறியுள்ளார். இதுகுறித்து
தமிழக அரசின் சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி பங்களிப்பு ஓய்வூதிய திட்ட
பிரிவின் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழக
அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய
திட்டத்தை கொண்டு வருவதற்காக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்
சேர்ந்துள்ள நிதியை ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை
ஆணையத்திற்கு அனுப்புவது தவிர்க்க முடியாதது. பழைய ஓய்வூதிய திட்டத்தை
செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின்
அறிக்கை தமிழக அரசுக்கு வந்துள்ளது.
அந்த அறிக்கை
அரசால் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அதன்பிறகு பங்களிப்பு ஓய்வூதி திட்டத்தில் சேர்ந்துள்ள நிதியை ஓய்வூதிய
நிதி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் திரட்டப்பட்ட நிதியை ஓய்வூதிய
நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் பழைய ஓய்வூதிய
திட்டத்திற்கு (பிஎப்ஆர்டிஏ) மாற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவின்
அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே தற்போது இந்த முடிவு அரசின் பரிசீலனையில்
இருக்கிறது. இறுதி முடிவை தமிழக அரசே எடுக்கும் என்று தகவல் தலைமை தணிக்கை
அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.