முதல்வர் நிவாரண நிதிக்கு சேமிப்புப் பணத்தை வழங்கிய பள்ளி மாணவி; பாராட்டி மடிக்கணினி வழங்கிய விழுப்புரம் எம்எல்ஏ


முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு தன் சேமிப்புப் பணம் ரூ.1,500 வழங்கிய மாணவிக்கு விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் மடிக்கணினி வழங்கினார். தற்போது உலகம் முழுவதும் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகளான 5-ம் வகுப்பு மாணவி சிந்துஜா. தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு 2-வது பரிசாக ரூ.500-ஐ பெற்றார். அந்தப் பணத்துடன் மேலும் பணம் சேர்த்து உயர்கல்வியின் தேவைக்காக மடிக்கணினி வாங்குவதற்காக ஒரு உண்டியலில் சேமித்து வந்த ரூ.1,500 பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே அவர் வங்கிக்குச் சென்று அந்த பணத்திற்கு வரைவோலை எடுத்து, அதனை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக, கடந்த 11-ம் தேதி மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார். 
இதனை செய்தித்தாளில் படித்த தலைமைச் செயலாளர் இறையன்பு, "மாணவி சிந்துஜாவு-க்கு தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வதாகவும், சிறுவயதிலேயே பிறர் அனுபவிக்கும் துயரங்களை உணர்ந்து, அதற்கு தன்னால் உதவிகளை செய்ய வேண்டும் எண்ணத்தை ஊட்டி வளர்த்த பெற்றொரை பாராட்டுகிறேன். அம்மாணவி மேன்மேலும் தன் வாழ்வில் படித்து சிறந்து விளங்கவேண்டுமென்று இறைவனை பிராத்திக்கிறேன்" என்று அனுப்பிய பாராட்டு கடிதத்தை இன்று (மே 13) மாலை ஆட்சியர் அண்ணாதுரை அம்மாணவியிடம் வழங்கினார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், சிந்துஜாவுக்கு மடிக்கணினி ஒன்றை வழங்கினார். அப்போது, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.